districts

img

வீணான பொருட்களில் உருவாகும் கலைப்பொருட்கள் சாதிக்கும் ஆக்கூர் சகோதரிகள்

மயிலாடுதுறை, ஆக.24 - வீணாகி குப்பையில் போட வேண்டியப் பொருட்களை எல்லாம் தங்களது நுட்பமான திறமையால் கலைப் பொருட்களாக்கி வீடுகள், அலுவலகங்களில் பார்வைக்கு வைக்க விற்பனை செய்து சிறிய அளவிலான லாபத்தை ஈட்டுகின்ற சகோதரிகளை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி - கலா தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் அக்க்ஷயா முதுகலை 2 ஆம் ஆண்டு படித்து வரு கிறார். மூன்றா வது மகள் யுவஸ்ரீ அதேப் பகுதியி லுள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக புதிய கைவினைப் பொருட்களை செய்து சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தேங்காய் சிரட்டைகளை (கொட்டாங்கச்சி) சேகரித்து, அவற்றை பண்படுத்தி, அவற்றை கலைப்பொருட்களாக வடிவமைத்துள்ளனர். பிறகு முட்டை ஓடுகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் விழிப்புணர்வு ஓவியங்களை வரையத் தொடங்கினர்.

 பின்னர் மேசையில் அலங்காரத்திற்கு வைக்கக் கூடிய பொருள், தண்ணீர் அருந்து வதற்கான கப் உள்ளிட்ட வற்றை தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி தயாரித்துள்ள னர். தொடர்ந்து சிறிய ரக பிளேடை மட்டுமே பிரதானமாக பயன்படுத்தி, தேங்காய் சிரட்டையில் பல்வேறு பொருட்களைச் செய்ய துவங்கியுள்ளனர்.

தனது சகோதரிக்கு, தங்கை யுவஸ்ரீ தேங்காய் சிரட்டையில் மீதமானவற்றை ஒன்றாக சேகரித்து அதனை எரித்து, அத்துகள்கள் மூலம் தேங்காய் சிரட்டையில் செய்யும் கைவினைப் பொருட்களுக்கு வர்ணம் பூசி தயார் செய்கிறார். இக்காலகட்டத்தில் முழுவதும் ரசாயனத்தைப் பயன்படுத்திய வர்ணத்தை பூசி, ஓவியம் வரைந்து வருபவர்கள் மத்தியில் தேங்காய் சிரட்டையை எரித்து அதில் வரும் கரி துகள்களை பயன்படுத்தி தத்ரூபமாக ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார் தங்கை யுவஸ்ரீ.

 கடந்த மாதத்தில் தரங்கம்பாடி சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் நடந்த ஓவிய கண்காட்சியில் இருவரது படைப்புகளும், கைவினைப் பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு பார்வையாளர்களை வெகுவாய் கவர்ந்தன. இருவரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களின் தனித் திறமைகளை காட்சிப்படுத்திய நிலையில், பலரும் இவர்களின் கைவினைப் பொருட்களை வாங்குவதற்கு ஆர்வமுடன் முன் வருகின்றனர். படித்துக் கொண்டு, ஓய்வு கிடைக்கும் நேரங்களில் தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி தேநீர் கோப்பை, அழகு சாதனப்பொருள், தண்ணீர் கப் மற்றும் கிண்ணம் உள்ளிட்டவற்றை  தயாரித்துள்ளனர்.

அதனை பலருக்கும் விற்பனை செய்து குறிப்பிட்ட அளவிலான லாபத்தை படிக்கும் வயதிலேயே ஈட்டி வருகின்றனர். அந்தத் தொகையை இருவரும், தங்களது கல்விச் செலவுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், அரசு சார்பில் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

மேலும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக இதுபோன்று வித்தியாசமான கைவினைப் பொருட்களை செய்து சந்தைகளில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்யலாம் எனவும், சுய தொழில் தொடங்குவதற்கு அரசு உதவினால் மற்றவர்களுக்கும் கைவினைப் பொருட்கள் செய்யும் முறையை இலவசமாக கற்று தருவோம் என்றும் சகோதரிகள் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தைகள் ஒவ்வொருவரும் திறமையானவர்கள்தான்! அவர்களை ஊக்குவித்தால் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருப்பார்கள் என்பதற்கு ஆக்கூர் சகோதரிகள் சாட்சி.